கோவை: இலங்கையின் பிரபல தாதாவாக இருந்தவர் அங்கோடா லொக்கா. போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இவர், கடந்த 2017-ல் 7 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார். போலீசின் பிடியில் சிக்காமல் அங்கிருந்து தப்பி வந்து சென்னையில் பதுங்கினார். இவர், கடந்த மாதம் 3ம் தேதி கொல்லப்பட்டதாகவும், மதுவில் விஷம் கலந்து கொடுத்து அவருடைய காதலி அவரை கொன்றதாகவும் இலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில்தான், மதுரையை சேர்ந்தவரும், கோவை காளப்பட்டி ரோடு சேரன் மாநகரில் வசிப்பவருமான சிவகாமசுந்தரி(36), தனது உறவினர் பிரதீப்சிங் (35) என்பவரை உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி கடந்த 4ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.