340 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கண்டுபிடிப்பு: விந்தணுக்கள் பாம்புபோல் நீந்துவது இல்லை நீர்நாயை போல் சுழன்று சுழன்று செல்கிறது

இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூற்றால் அறிவியல் உலகம் வியப்பு

பிரிஸ்டல்: ‘மனிதனின் விந்தணுக்கள் பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதில்லை. அது, சுழன்று செல்கிறது,’ என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படும் என்று தெரிகிறது. பூமி தட்டையானது என்று முதலில் கூறப்பட்டது. பின்னர், அது உருண்டையானது என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கூற்றுதான் இதுவரையில் இருக்கிறது. இதேபோல், மனிதனின் விந்தணு பற்றிய முதல் கண்டுபிடிப்பு 1678ல் நடந்தது. அதை செய்தவர் அந்தோணி வான் லியூவான்ஹூக் என்ற  டச்சுக்காரர். இவர், ஆற்றல் மிகுந்த மைக்ராஸ்கோப் ஒன்றைக் கண்டுபிடித்தார். அதில்  தற்செயலாக பாக்டீரியாவையும் கண்டறிந்தார்.

இந்த கண்டுபிடிப்பு மருத்துவ  உலகில் ஒரு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு,  மைக்ராஸ்கோப்பை வைத்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் ஒருநாள், விந்துவையைம் ஆய்வு  செய்தார். அதில் மிகவும் நுட்பமான உயிரணுக்கள் இருப்பதையும் கண்டறிந்தார்.  அந்த விந்தணுக்கள் தலை, வாலுடன் இருப்பதாக கூறினார். அது,  ஒரு பாம்பினைப் போல் வளைந்து நெளிந்து நீந்திச் சென்று பெண்ணின் கருமுட்டையுடன் இணைவதாகவும் கூறினார். யு.கே ராயல் சொசைட்டியில் 1678-ம்  ஆண்டு கூறப்பட்ட ஹூக்கின் கருத்து இதுவரை மறுக்கப்படவில்லை.  அவரைத் தொடர்ந்து வந்த அறிவியலாளர்கள் மைக்ராஸ்கோப் வழியாக விந்தணுவை பல கோணங்களில் ஆராய்ச்சி  செய்தபோதும் அதில் எந்த மாறுபட்ட கருத்தையும் தெரிவிக்கவில்லை.

எனவே, இந்த  கடந்த 340 ஆண்டுகளாக இந்த கருத்து மட்டுமே வலுவாகவே எல்லோரின் மனதிலும் பதிந்துள்ளது. எல்லாவற்றிலும் மாற்றம் உண்டு. ஆனால், மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்பார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இது பொருந்தும். ‘கண்ணால் காண்பதும் பொய்’ என்று நம் முன்னோர்கள் சொன்னதையே, ‘ஆராய்ச்சிகளின்போது உங்கள் கண்களை நம்பாதீர்கள்’ என அறிவியல் உலகமும் வேறு வார்த்தைகளில் சொல்கிறது. அப்படி நடத்தப்பட்ட தீவிரமாக ஆராய்ச்சியில்தான், விந்தணு பற்றிய புதிய கண்டுபிடிப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஹெர்ம்ஸ் கெடில்லா. இவர், இங்கிலாந்தில் இருக்கும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பாலிமேத்ஸ் ஆய்வு மையத்தின் தலைவர். விந்தணு பற்றிய புதிய கண்டுபிடிப்பு பற்றி இவர் கூறுகையில், ‘‘ தற்போது ஏற்பட்டிருக்கும் அதிநவீன தொழில்நுட்பமான 3டி மைக்ராஸ்கோப்பியில் ஆய்வு செய்தபோது, விந்தணுக்கள் இத்தனை நாட்களாக நம்மை ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. எங்களின் 3டி மைக்ராஸ்கோப்பில் ஆய்வு செய்தபோது, விந்தணுக்கள் தனது வாலை பயன்படுத்தி பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதில்லை. அது, தண்ணீருக்குள் இருக்கும் ஒரு நீர்நாயை போல் சுழன்று சுழன்று செல்வதை கண்டறிந்துள்ளோம். விந்தணுக்களின் இந்த இயக்கத்தைக் கண்காணிக்க அவற்றுடன் நாமும் இணைந்து பயணிக்க வேண்டும்.

இந்த தொழில்நுட்பம் அப்போது இல்லை. ஆனால், தற்போது வளர்ச்சியடைந்திருக்கும் தொழில்நுட்ப உதவியுடன் அது சாத்தியமாகியிருக்கிறது. அந்த உயிரணுக்களை அதிநவீன காமிராவின் துணையுடன் சுழற்சி முறையிலும் பார்க்க முடிகிறது,’’ என்கிறார் அவர்.அவர் மேலும் கூறுகையில், ‘‘விந்தணுக்கள் நீந்தும் வேகத்துக்கு ஈடு கொடுத்துப் பயணிக்க, விநாடிக்கு 55 ஆயிரம் காட்சிகளை பதிவு செய்யும் திறன் படைத்த மைக்ரோஸ்கோப்பை பயன்படுத்தினோம். இதன்மூலம், தொலைவில் இருந்து மட்டுமே விந்தணுக்களை வேடிக்கை பார்க்காமல், அதனுடனே இணைந்து பயணிக்க முடிகிறது. அதன் பக்கவாட்டு நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடிந்தது. இதில் விந்தணுக்கள் சுழலும் தன்மையுடன்தான் நகர்கிறது என்பதைக் கண்டறிந்தோம். 2 ஆண்டுகளாக இந்த ஆய்வை நடத்தினோம்,’’ என்றார்.

இதனால் என்ன பயன்?

கடந்த 340 ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்த ஒரு தகவலையே, இந்த கண்டுபிடிப்பு புரட்டிப் போட்டிருப்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் என்ன பயன் என்று சாதாரணமாகக் கேள்வி எழலாம். ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பு, கருத்தரித்தல் சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் வாய்ப்பு அதிகம். இது அடுத்து வரும் சில ஆண்டுகளில் தெரிய வரும் என்கிறார்கள் ஆராய்ச்சிக்குழுவினர்.

Related Stories: