இந்தியாவிடம் மோதிய சீனாவுக்கு அடிக்கு மேல் அடி: அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு தடை: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: சீனாவின் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவிலும் தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். இந்திய-சீன எல்லையில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய வீரர்கள் மீது சீனா திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பொருளாதார ரீதியாக பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் டிக்டாக், ஹலோ, ஷேர்இட் உட்பட 59 ஆப்களுக்கு கடந்த ஜூலையில் மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.  இதனை தொடர்ந்து, அமெரிக்காவிலும் சீன ஆப்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அமெரிக்க குடிமக்களின் தனிப்பட்ட ரகசிய தகவல்கள் திருட்டு அச்சுறுத்தல் காரணமாக சீன ஆப்பான டிக்டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வந்தது. அமெரிக்கா எம்பி.க்களும் டிக்டாக் ஆப் தடை செய்யப்பட வேண்டும் என சமீப நாட்களாக குரல் கொடுத்து வருகின்றனர். தீங்கு விளைவிக்கும் நோக்கங்களுக்காக சீன அரசு இந்த தளங்களை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனை டிக்டாக் நிறுவனம் மறுத்தது.  இந்நிலையில், சீனாவின் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

மேலும் அதிபர் டிரம்ப் கூறுகையில், “டிக்டாக் செயலியை பொறுத்தவரை அமெரிக்காவில் விரைவில் தடை விதிக்கப்படும். பொருளாதார சக்தி அல்லது நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக (சனிக்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப்படும். டிக்டாக் உட்பட 106 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இது அதிகாரிகள் மற்றும் எம்பிக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதனால், டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படும். அமெரிக்காவில் இதற்கு மாற்றாக வேறு வழிகள் குறித்து யோசித்து வருகிறோம்,” என்றார்.

இது தொடர்பாக டிக்டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிக்டாக் செயலிக்கு உலகம் முழுவதும்  100 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். பொழுதுபோக்கு மற்றும் தொடர்புக்காக டிக்டாக் பயன்படுத்துகின்றனர். பலருக்கு வாழ்வாதாரம் தருவதாகவும் இந்த செயலி உள்ளது,’ என குறிப்பிட்டுள்ளது.

* அமெரிக்காவை சேர்ந்த மியூசிக்கல்.லீ ஆப்பை கடந்த 2017ம் ஆண்டு சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் வாங்கியது.

* அதனுடன் சில வீடியோ சேவையையும் இணைத்து டிக்டாக்காக மாற்றியது.

* அதன் பிறகுதான், டிக்டாக் உலகம் இந்தளவுக்கு பிரபலமானது.

மற்ற நாடுகளும் தடை விதிக்குமா?

உலகளவில் குறுகிய காலத்தில் பிரபலமான டிக்டாக், இந்தியாவிடம் சீனா  ராணுவம் மோதிய ஒரே காரணத்துக்காக பலிகடா ஆகி இருக்கிறது. இதனால், இதன் தாய்  நிறுவனமான சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் மிகுந்த கவலை  அடைந்துள்ளது. தனது செயலிக்கு இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் தடை  விதிப்பதால் மற்ற நாடுகளும் இதை பின்பற்றும் என்ற கவலை அதற்கு  ஏற்பட்டுள்ளது.

யாருக்கும் எதிரி அல்ல

அமெரிக்காவிலும் தடை விதிப்பது குறித்து டிக்டாக் சிஇஓ  கெவின் மேயர் கூறுகையில், “நாங்கள் அரசியல் செய்யவில்லை. நாங்கள் அரசியல்  சார்ந்த விளம்பரங்களை அனுமதிக்கவில்லை. மக்களுக்கு பொழுதுபோக்கு வழங்கும் தளமாக இருக்க  வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக உள்ளது. டிக்டாக் மிகப்பெரிய இலக்காக  மாறி உள்ளது. ஆனால், நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது” என்றார்.

டிக் டாக்கை வாங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்

டிக்டாக்கிற்கு அமெரிக்காவும் தடை விதிப்பதால், அமெரிக்காவிலும் அது முடங்கும் அபாயம் உருவாகி இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்த செயலியின் அமெரிக்க வர்த்தகத்தை மட்டும் வாங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Related Stories: