சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் 41,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 41,000 ரூபாயைத் தாண்டி வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது தங்கம் விலை. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனாவால் சர்வதேச அரங்கில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் மஞ்சள் உலோகம் என்று அழைக்கப்படும் தங்கத்தில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை 28 ரூபாய் அதிகரித்து 5,178 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 41,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் மளமளவென உயர்ந்து வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 40 காசுகள் அதிகரித்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இனி தங்கத்தை காட்சி பொருளாகத்தான் பார்க்க முடியும் போல என நகை பிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.