சேதமடைந்த நிழற்குடையை அகற்ற கோரிக்கை

சாயல்குடி: கடலாடி அருகே சேதமடைந்த நிலையில் பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரிலிருந்து கடலாடி செல்லும் சாலையில்  எ.புனவாசல் விலக்கு பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்குடை உள்ளது. எ.புனவாசல், கொட்டகை, ஒத்தவீடு, சிறுகுடி, மாரந்தை, ஓரிவயல், பனைக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உரிய பராமரிப்பில்லாததால் இந்த நிழற்குடை சேதமடைந்து, இடியும் நிலையில் உள்ளது.

பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், வெயில் மற்றும் மழைக்கு நிழற்குடையின் கீழ் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மீது நிழற்குடை இடிந்து விழுந்து உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி, சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு, புதிய நிழற்குடை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: