தானிய விதைகள் முளைக்காததால் ஆத்திரம்!: மகாராஷ்டிராவில் வேளாண்மைத்துறை இயக்குநரின் அலுவலகம் சூறை!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரில் வேளாண்மைத்துறை இணை இயக்குனரின் அலுவலகத்தை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அடித்து உடைத்து சூறையாடினர். இக்காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் வேளாண்மைத்துறை சார்பாக விதை நெல் வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், வேளாண்மைத்துறையால் அப்பகுதி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட சில விதைகள் தரமானதாக இல்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் வழங்கப்பட்ட தானிய விதைகள் முளைக்கவில்லை என்று மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து, முளைக்காத விதைகள் தொடர்பாக லத்தூர் விவசாயத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க அக்கட்சினர் சென்றனர்.

அச்சமயம் புகார் அளிக்காமல் திடீரென பலே பலத்தில் ஈடுபட்ட அவர்கள் கோஷமிட்டபடியே அலுவலகத்தை அடித்து உடைக்க தொடங்கினர். தொடர்ந்து, அலுவலக அறையில் இருந்த கண்ணாடிகளையும், கணினிகளையும் தூள்தூளாக உடைத்தெறிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: