சென்னை: கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விதமான கடன்களையும் தங்கு தடையின்றி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள், விவசாயிகள் தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டியில் அடைமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலான மக்களுக்கு பலனை கொடுத்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கூட்டுறவு வங்கியில் இனி கடன்கள் வழங்கப்படாது என்ற உத்தரவு தமிழகம் முழுவதும் பரவியது. இது பாமர ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர், கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்படவில்லை என்று விளக்கமளித்தார். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து விதமான கடன்களையும் தங்கு தடையின்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன்கள் வழங்க வேண்டாம் என யாரும் அறிவிக்கவில்லை. இது தவறான செய்தி என அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.