கொரோனா நிவாரணத்திற்கு எவ்வளவு நிதி பெறப்பட்டது?: இணையத்தில் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!!

சென்னை: கொரோனா நிவாரணத்திற்கு நிதி அளித்தவர்கள் யார் யார்? எவ்வளவு நிதி பெறப்பட்டது என்கின்ற விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த கற்பகம் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கினை ஒரு பொதுநல வழக்காக தொடர்ந்திருந்தார். அதில் மற்ற மாநிலங்களில் எல்லாம் கொரோனா நிவாரண நிதி பெற்றவர்கள் பெயர்கள் பட்டியல், பயனாளிகள் யார்? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் இடம்பெற்றிருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இணையதளத்தில் எந்தவொரு விவரமும் இடம்பெறவில்லை என்றும், எனவே அது தொடர்பாக அரசு, இணையதளத்தில் நன்கொடை அளித்தவர்கள் யார்?, யாரெல்லாம் பயனாளிகள், எவ்வளவு நிதி செலவிடப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.என். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் கொரோனா நிதியாக 100 ரூபாய் கூட பல லட்சம் பேர் கொடுத்துள்ளனர். அந்த விவரங்களை எல்லாம் கணக்கிட்டு இணையத்தில் வெளியிடுவது மிகவும் சிரமம் என தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து விவரங்களுமே இடம்பெற செய்ய வேண்டும் என்றும், தற்போது போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் 8 வாரங்கள் கால அவகாசம் வழங்கி அதற்குள் பயனாளர்கள், நிதி உள்ளிட்ட விவரங்களை வெளிப்படை தன்மையுடன் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories: