திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 286 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,573 ஆகவும் உயர்ந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 7,287 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருவள்ளூர், திருத்தணி நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சில ஒன்றியங்களில் 286 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து 286 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,573 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை, 4,335 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மற்ற 3,104 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.