அம்பத்தூர்: அம்பத்தூர், ஓ.வி.அழகேசன் நகரை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி ரம்யா (29). தனியார் வங்கியில் அதிகாரி. இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து வங்கியில் இருந்து வீட்டிற்கு மொபட்டில் அம்பத்தூர், காமராஜர்புரம், சி.டி.எச் சாலை, போலீஸ் இணை கமிஷனர் அலுவலகம் எதிரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை கடந்து பைக்கில் சென்ற ஒரு பெண், ‘‘உங்கள் மொபட் வீலில் காற்று குறைவாக உள்ளது. பஞ்சராகி இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார். ரம்யா, மொபட்டை சாலை ஓரமாக நிறுத்திப் பார்த்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். இதுகுறித்து, ரம்யா, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பெரியதுரை தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அப்பகுதி கண்காணிப்பு கேமரா மூலம் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.