×

மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை உடனடியாக நிறைவேற்றி தமிழகத்தில் கிராம அளவில் பரவும் கொரோனாவை தடுத்து நிறுத்துங்கள்: எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை உடனடியாக  நிறைவேற்றி, கிராம அளவில்  பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்றை உடனடியாக தடுத்து நிறுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய் கிராமப்புறங்களிலும் படுவேகமாக பரவி, சென்னையிலும் தொடருவது குறித்தும், இதை தடுத்து, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு முறையான சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய காணொலி காட்சி கலந்துரையாடலின் போது, அவர்கள் தெரிவித்த ஆலோசனைகள் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், பின்வரும் அவற்றை முதல்வர் பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்:

1) மருத்துவ உள்கட்டமைப்புகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். ஆகவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களை பொதுவானவையாக கொண்டு, தமிழக கொரோனா நோய் தொற்று சூழ்நிலைக்கு ஏற்ப அரசே நோய்த் தடுப்பு, சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பான, செயல்முறைக்கேற்ற முடிவுகளை எடுக்க வேண்டும்.
2) நகரங்கள் முதல் கிராமங்கள் வரை நோய் தொற்று ஏற்பட்ட நிலையிலும், `சமூகப் பரவல் இல்லை’’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது, மக்களுக்கு விபரீதத்தை உணர்த்த தவறும் ஆபத்தான போக்கு. ஆகவே சமூக பரவல் குறித்து முறைப்படி ஆய்வு மேற்கொள்ள தனியாக ஒரு வல்லுநர் குழுவை நியமித்து, அறிக்கை பெற்று உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

3) தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆகவே, `நோய் தொற்றாளரை கண்டுபிடிப்பது’’ `நோய் தொற்றாளரின் தொடர்புகளை கண்டுபிடிப்பது’’ `தேவையான சிகிச்சை அளிப்பது’’ மூலம் மட்டுமே தொற்று பரவுவதை தடுக்க முடியும். அப்போதுதான், 2 ஆயிரத்திற்கும் அதிகமாகிவிட்ட கொரோனா இறப்பு எண்ணிக்கையை, தொடர்ந்து மேலும் மேலும் அதிகரிக்கவிடாமல் குறைக்க முடியும்.
4) சென்னையில் நோய் பாதிப்பு குறைந்து வருவதற்கான காரணங்களில் ஒன்று, மக்களிடையே ஏற்பட்டுள்ள சுய எதிர்ப்பு சக்தி. ஊரடங்கினால் தொற்றின் பாதிப்பு விகிதத்தை தள்ளிப்போட முடியுமே தவிர முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும். ஆகவே அதற்கு ஏற்றாற்போல், தொலைநோக்கு சிந்தனையோடு, `கொரோனா’’ மருத்துவ கொள்கை ஒன்றை வகுத்து செயல்படுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் நோய் பரவலை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும்.

5) “கொரோனா மருத்துவக் கழிவுகளை” சரியான முறையில் பாதுகாப்புடன் அகற்றி, அறிவியல்ரீதியாக அவற்றை அழித்து, மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.
6) முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்த்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முற்றிலும் புதிய வாழ்க்கை நடைமுறைக்கு மக்கள் தங்களை படிப்படியாக தயார் செய்து கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, காசநோய் போன்ற நோயை அறவே தமிழகத்திலிருந்து போக்கிட ஆக்கபூர்வமான செயல்திட்டத்தை உருவாக்கிட வேண்டும்.
7) கொரோனா நோய் தவிர, பிற நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியவில்லை. இது புதிய பிரச்சினைகள் உருவாகி, இக்கட்டான சூழல் நிலவுகிறது. ஆபத்தான நோயால் பாதிக்கப்படுவோர் ‘டயாலிஸிஸ்’ தேவைப்படுவோர் எல்லாம் அரசு மருத்துவமனைகளுக்கு போக முடியாமலும், அட்மிஷன் கிடைக்காமலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து அவதிப்படுகிறார்கள். ஆகவே, பிற நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தடையின்றி சிகிச்சை பெற ஒரு பிரத்யேக `செயல் திட்டம்’’ உருவாக்கி, அதை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிறைவேற்றிட வேண்டும். ஆகவே, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை உடனடியாக நிறைவேற்றி, கிராம அளவில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்றை உடனடியாக தடுத்து நிறுத்திடவும், கொரோனா தவிர பிற நோயால் பாதிக்கப்படுவோரின் தடையில்லாத சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகளை அரசு மருத்துவமனைகளில் செய்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* சங்கரய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா 99வது பிறந்தநாளினை காண்பது பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாகும். பொதுவுடைமை கொள்கையினை வாழ்வின் லட்சியமாக ஏற்றுக்கொண்டு, பதவி சுகங்களை எதிர்பாராமல், எளிய மக்களின் நலனுக்காக வாழ்வை அர்ப்பணித்து, தியாகத் தழும்புகளையே பதக்கங்களாகக் கொண்டவர். பொதுவாழ்வில் ஈடுபடுவோர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழும் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா நூற்றாண்டு விழா கண்டு, பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்திட திமுக சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : spread ,experts ,villages ,Edappadi ,MK Stalin ,Tamil Nadu , Medical Specialist, Consulting, Tamil Nadu, Village Corona, Stop, Edappadi, MK Stalin Advice
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...