மும்பை: மும்பை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவா, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
மும்பையில் செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.புறநகர்ப் பகுதியான தகானுவில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. விடாமல் பலத்த மழை பெய்து வருவதால் கிங்ஸ் சர்க்கிள், அந்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும் தாழ்வான இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி மெதுவாகச் செல்கின்றன.
இந்த கனமழை காரணமாக மும்பை, பால்கர், தானே உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மழைநீர் தேங்கியுள்ள இடங்களுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும், கடலோரத்தில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறும் மும்பை மாநகராட்சி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தப்படி செல்கின்றன. சில இடங்களில் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் சிறுவனர்கள் குளித்து மகிழ்ந்தனர். தொடர் மழையால் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாள்களுக்கு மழைக்கு நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.