ஊரடங்கால் கூடை பின்னும் வேலை செய்யும் வழக்கறிஞருக்கு சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதி 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராகூரணியை அடுத்த தென்னக்குடியை சேர்ந்த உத்தமகுமரன் என்ற வழக்கறிஞர், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்துள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தின் பாரம்பரிய தொழிலான கூடை பின்னும் பணிக்கு மாறியுள்ளார். இதனை அறிந்த சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்து ஊக்கம் அளிக்கும் விதமாக கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
இந்த பாராட்டு மற்றும் நிதியுதவியை தனது வாழ்நாளில் மறக்கமுடியாத பொக்கிஷம் என்று வழக்கறிஞர் உத்தமகுமரன் உருக்கமாக நீதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். பழங்குடி குறவர் இனத்தை சேர்ந்த உத்தமகுமரன், கடந்த 10 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து வழக்கறிஞர் உத்தமகுமார் தெரிவித்ததாவது, சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ராமசந்திர மேனன் அவர்கள் எனக்கு தலைமை செயலகத்தின் வழியாக ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். அதனுடன் சேர்த்து ஒரு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில், இது உங்களுக்காக ஒரு கொடையாகவோ, பங்களிப்பாகவோ, ஒரு இரக்கத்தின் பேரிலோ வழங்கப்படவில்லை. மாறாக உங்கள் உழைப்புக்கு கிடைத்த மரியாதை. உங்களுக்கு எனது பாராட்டுக்கள். மேலும் சூரியன் மறைவதே மீண்டும் உதிக்கும் என்ற நேர்மறையான கருத்துக்களை வழக்கறிஞர் வாழ்வில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது என வழங்கறிஞர் தெரிவித்தார்.