×

தமிழக வளர்ச்சி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பெருமையை போற்றுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஜூலை 15-உலக நாட்காட்டிகள் அனைத்திலுமே இந்தத் தேதி இருக்கும் என்றாலும், தமிழகத்திற்கு இந்த நாளுக்கென தனியானதொரு சிறப்பு உண்டு. ஆம்.. கல்வி வளர்ச்சி நாளாகத் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் கொண்டாடப்படும் இந்த நன்னாள் தான் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளாகும். தேர்தல் கள அரசியலைக் கடந்து, திமுகவிற்கும் பெருந்தலைவருக்கும் இருந்த நட்புறவை விளக்க இப்படி நெஞ்சை நெகிழ வைக்கும் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு!

நெருக்கடி கால இந்தியாவில் ஜனநாயகம் உயிருடன் இருக்கும் ஒரே மாநிலமாகத் தலைவர் கலைஞர் ஆட்சி செய்த தமிழகம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய பெருந்தலைவர் காமராஜரின் உயிர், 1975-ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் பிரிந்தது. அப்போது முதல்வராக இருந்த தலைவர் கலைஞர், மறைந்த பெருந்தலைவரின் உடலை கிண்டி-காந்தி மண்டபம் அருகிலேயே தகனம் செய்து, நினைவிடம் அமைத்திட வழி செய்தார். மேலும் விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தையும் நினைவுச் சின்னமாக மாற்றி அமைத்தார் கலைஞர்.

பெருந்தலைவர் காமராஜர் மறைவதற்கு 40 நாட்களுக்குமுன் நடைபெற்ற என்னுடைய திருமண விழாவில்; உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும், அவர் வருவதற்கென்றே அமைக்கப்பட்ட தனிவழியில் மணமேடைக்கு வந்து, அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோருடன் இணைந்து, வாழ்த்தும் ஆசியும் வழங்கிய அந்த நிகழ்ச்சி இன்றும் எனது கண்களின் நினைவுகளில் நின்று நிலைத்திருக்கிறது. 13 ஆண்டுகால இடைவெளிக்குப்பிறகு, 1989-ல் தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாகத் தலைவர் கலைஞர் பொறுப்பேற்று, ஆட்சி செய்தபோது, இந்தியாவின் பிரதமரான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தபோது,

அந்த மேடையில் உரையாற்றிய முதல்வர் கலைஞர், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததும், விழா மேடையிலேயே அதனை ஏற்று, பிரதமர் வி.பி.சிங் அண்ணா- காமராஜர் ஆகியோரின் புகழ்ப் பெயர்களைச் சூட்டியதையும் மறக்க முடியுமா? திமுக ஆட்சி அமைத்த காலங்களில் எல்லாம் பெருந்தலைவர் காமராஜரை பெருமைப்படுத்தும் வகையில் தலைவர் கலைஞர் சிறப்புகளைச் செய்தபடியே இருந்தார். 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில், ஐந்தாம் முறை தமிழக முதல்வராக ஆட்சி செய்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்,

மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவசக் கல்வி தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளினை தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள்தோறும் கல்வி வளர்ச்சி நாளாக எல்லாக் காலங்களிலும் கொண்டாட வேண்டும் என்பதற்காகச் சட்டமியற்றி, அதனை நடைமுறைப்படுத்தி, ஆண்டுதோறும் ஜூலை 15 அன்று கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடிக்கச் செய்தார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோதும் இன்றளவும் அந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கல்விக் கண் திறந்த கர்மவீரர் - தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிய தலைசிறந்த முதல்வர்-அரசியல் பொதுவாழ்வில் அரிய மாமனிதர் - திராவிட இயக்கத் தலைவர்களின் மாறா அன்புக்குப் பாத்திரமானவர் -தலைவர் கலைஞரின் மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளாம் ஜூலை 15 அன்று (இன்று), அண்ணா அறிவாலயத்தில் பெருந்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்படவிருக்கிறது. நம் தலைவர் கலைஞர் காட்டிய வழியில் ஜூலை 15ம் நாளினை, கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடித்து, பெருந்தலைவர் பெருமைகளை இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; ஏற்றிப் போற்றுவோம்! இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கலைஞர் கடைப்பிடிக்கச் செய்தார்.

Tags : Perunthalaivar Kamaraj ,Tamil Nadu Development Plan: MK Stalin ,implementation ,volunteers ,Chief Minister , Tamil Nadu Development Project, Executed, Chief Minister's Chief Kamaraj, Respect, Volunteer, MK Stalin's Letter
× RELATED பணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும்...