சென்னை: தமிழகத்தில் யானைகளின் வாழிடத்தை மேம்படுத்தவும், இறப்பைக் குறைக்கும் நோக்கிலும் ஆய்வை மேற்கொள்ள நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் தலைவராகக் கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவவலர் சேகர் குமார் நீராஜ், உறுப்பினர் செயலராக மதுரை மாவட்ட வன அலுவலர் எஸ்.ஆனந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவின் உறுப்பினர்களாகப் பெங்களூருவைச் சேர்ந்த யானைகள் ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய், சென்னையைச் சேர்ந்த நிபுணர் சிவ கணேசன், இந்திய-அமெரிக்கன் சொசைட்டியின் நிர்வாக அறங்காவலர் அறிவழகன், தேனி கால்நடை மருத்துவர் எம்.கலைவாணன், சென்னை கால்நடை மருத்துவர் ஏ.பிரதீப், கோவை டபிள்யு.டபிள்யு.எஃப் அமைப்பைச் சேர்ந்த பூமிநாதன், நிதின் சேகர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகுமார், மத்திய வனக் குற்றத் தடுப்புப் பிரிவின் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு, டிசம்பர் 31ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.