சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளி, கல்லூரிகள் இயங்காததால் கல்வி நிறுவன வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலை வரி, மோட்டார் வாகன வரி செலுத்தும்படி அரசு நிர்ப்பந்திப்பதாகக் கூறி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் தமிழக பொதுச் செயலாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரி விலக்கு வழங்குவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசு, கடந்த ஜூன் 9ம் தேதி அறிவுறுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேச அரசு, கல்வி நிறுவன வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் வாகனங்களுக்கான கட்டணங்களும் வசூலிக்க முடியவில்லை என்பதால், சாலைவரி, மோட்டார் வாகன வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.