×

திருநின்றவூர் அருகே பயங்கரம் திமுக ஊராட்சி தலைவர் ஓட, ஓட வெட்டிக்கொலை: பைக்கில் வந்த கூலிப்படைக்கு வலை

சென்னை: ஆவடியை அடுத்த திருநின்றவூர், கொசப்பாளையம் ஊராட்சி தலைவரை ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்த திருநின்றவூர், கொசவன்பாளையம் ஊராட்சி தலைவர் பரமகுரு (38). வழக்கறிஞர். பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக வழக்கறிஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை பரமகுரு கொசவன்பாளையம் அருந்ததிபாளையத்தில் நடைபெறும் கால்வாய் பணிகளை நாற்காலியில் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தார். அப்போது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனையடுத்து, பரமகுரு செல்போனில் பேசிக்கொண்டே அங்கிருந்து நடந்து மெயின் ரோட்டுக்கு சென்றார். பரமகுரு, அருந்ததிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தார். அப்போது, 3 பைக்கில் வந்த மர்மக் கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர், அவரிடம் அந்த கும்பல், வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து பரமகுருவை வெட்டியுள்ளனர். உடனே பரமகுரு அந்த கும்பலிடமிருந்து தப்ப நடுரோட்டில் ஓடியுள்ளார். அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். பொதுமக்களை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து பைக்குகளில் தப்பி சென்றது. பின்னர், பொதுமக்கள் வந்தபோது பரமகுரு சம்பவ இடத்திலேயே  இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு ஷிபா என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனர்.  

ஊராட்சி தலைவர் பரமகுரு வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கொசவம் பாளையம் முழுவதும் பரவியதால் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பூந்தமல்லி- திருநின்றவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், போலீசார் போராட்டக்காரர்களிடம் கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  

புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொட்டாம்பேடு கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. மேலும், திமுக ஊராட்சி தலைவர் பரமகுரு கொலை சம்பவத்தை அறிந்து, திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி துணை பெருந்தலைவர் டி.தேசிங்கு ஆகியோர் வந்து குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், அவர்கள் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர்.

Tags : Terrorist DMK ,panchayat leader ,Thiruninravur DMK ,Thiruninravur , Thiruninravur, terror, DMK panchayat leader, murder, web for mercenaries
× RELATED அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் ஊராட்சி...