செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், செங்கல்பட்டு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருப்பாளர்கள் முகமது உசேன், ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வாசுகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில், ‘‘ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் வழக்குகள், தற்காலிக பணிநீக்கம், பணியிட மாறுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக கைவிட வேண்டும்.
அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களையும், காலமுறை ஊதியத்திற்கு ஏற்ற முறையில் நியமனங்கள் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59 என உயர்த்துவதை திரும்பப்பெற வேண்டும். புதிய வேலை நியமன தடை சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு மற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்கள் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பது உட்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.