செய்யூர் அருகே வேன் மோதி தொழிலாளி பலி: டிரைவருக்கு வலை

செய்யூர்: செய்யூர் அருகே வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செய்யூர் அருகே பவுஞ்சூர் அடுத்த நெல்வாய் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக் (எ) செந்தமிழன் (51). இவர், குடும்பத்துடன், சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான நெல்வாய் பாளையம் கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் நெல்வாய் பாளையத்திலிருந்து பவுஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் வந்த வேன் அவர் மீது பலமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த செந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அணைக்கட்டு போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அணைக்கட்டு போலீசார் தலைமறைவான வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Related Stories: