×

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி புது மாப்பிள்ளை உள்பட இரண்டு பேர் பரிதாப பலி: டிரைவர் கைது

ஆவடி:  ஆவடி அடுத்த மோரை கிராமம், திருமலை நகரைச் சேர்ந்தவர் சரவணன் (42). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இவரது மைத்துனர் நரேஷ்குமார் (30). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சரவணன், நரேஷ்குமார் இருவரும் பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். பைக்கை சரவணன் ஓட்ட, நரேஷ்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். இவர்கள் வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலை, ஆவடி அருகே வெள்ளானூர் அருகே ஆர்ச் அந்தோணியார் நகர் பகுதியில் பைக்கில் வந்தனர். அப்போது, அங்கு எண்ணூரில் இருந்து ஒரகடம் நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.

இதனை கவனிக்காத இவர்கள் இருவரும் வந்த பைக் லாரி மீது மோதியது. இதில் சரவணன், நரேஷ்குமார் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து இருவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் மாவட்டம்,  மரக்காணம், பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (36) என்ற லாரி டிரைவரை கைது செய்தனர்.


Tags : bike crash , Truck, bike collision, new groom, two people, tragic death, driver arrested
× RELATED வேலூர் மாவட்டத்தில் பைக் நிலைதடுமாறி...