சென்னை: மக்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை என நம்பினால் கூட்டுறவு வங்கிகளுக்கு உரிமம் வழங்கியது ஏன்? என்று ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த மாதம் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் பல மாநிலங்களில் கிளைகள் உள்ள கூட்டுறவு வங்கிகள் ஆகியவை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும், வணிக வங்கிகளுக்கு உண்டான அனைத்து நடைமுறைகளும் இனி கூட்டுறவு வங்கிகளுக்கும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.