சாத்தான்குளம்: சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 காவலர்களிடம் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காவலர்கள் 5 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக மதுரை சிபிஐ அலுவலகத்துக்கு சாத்தன்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டது.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுரைப்படி சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்துவந்த நிலையில், தற்போது சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
சாத்தான்குளம் வழக்கை விசாரிப்பதற்காக சிபிஐ கூடுதல் எஸ்.பி-யான விஜயகுமார் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனுராக் சின்கா, பூரண்குமார், சப்-இன்ஸ்பெக்டர்களான சுஷில்குமார் வர்மா, சச்சின், ஏட்டு அஜய்குமார் காவலர்கள் சைலேந்திரகுமார், பவன்குமார் திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 2 நாட்கள் தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் 302, 341, 201, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. முக்கிய குற்றவாளியாக எஸ்.ஐ ரகுகனேஷ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிபிஐ கோரிக்கையை ஏற்று மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காவலர்கள் 5 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.