மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரைகள் வாங்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவையில்லை : தமிழக அரசு விளக்கம்!!

மதுரை: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வழங்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விளக்கம் அளித்துள்ளது.வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் கொரோனா பரிசோதனையை தவிர்க்க, உடல் வெப்ப நிலையை குறைத்துக்காட்ட பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியானது.இதனையடுத்து, பல மருந்துகங்களில் பாரசிட்டமால் மாத்திரைகள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், அரசு இது தொடர்பாக உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

இந்த நிலையில் சாதாரண காய்ச்சல் உள்ளவர்கள் மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரையை வழங்க உத்தரவிடக் கோரி ஜோயல் சுகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில், இன்று பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாராசிடமால் மாத்திரை வழங்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அதே சமயம், மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரையை வழங்க மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை என்றும் விளக்கம் அளித்தார். தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, எவ்விதத் தட்டுப்பாடும் இன்றி பாராசிட்டமால் மாத்திரை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி,ஜோயல் சுகுமார் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.

Related Stories: