×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 2 நாட்கள் சிபிஐ காவல்

மதுரை:  சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 2 நாட்கள் சிபிஐ காவல் வழங்கி மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ 5 நாள் அனுமதி கேட்ட நிலையில் 2 நாள் அனுமதி அளித்தது மதுரை நீதிமன்றம்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு

*தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

*இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், எஸ்எஸ்ஐ பால்துரை, ஏட்டுகள் முருகன், முத்துராஜா, போலீசார் சாமிதுரை, வெயிலுமுத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 10 பேரை கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர்.

*இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐ கூடுதல் எஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் ஏற்று விசாரணை நடத்தினர்.

*முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்திருந்த இந்த வழக்கை சிபிஐ தற்போது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் உட்பட 10 பேர் மீதும் 302 (கொலை வழக்கு), 341 (சட்ட விரோதமாக அடைத்தல்), 201 (முக்கிய தடயங்களை அழித்தல்), 109 (குற்றத்தை தூண்டுதல், துணை போதல்) ஆகிய பிரிவுகளின் கீழ்  சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கின் முதல் குற்றவாளியாக எஸ்ஐ ரகுகணேஷ், 4வது குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான எப்ஐஆர், நேற்று மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.

* 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

கொலை வழக்காக மாறியதையடுத்து, இந்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முத்துராஜா மற்றும் முருகன் ஆகிய 5 பேரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று நீதிபதி ஹேமந்தகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது,அப்போது,  இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முத்துராஜா மற்றும் முருகன் ஆகிய 5 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சிபிஐ மனு மீதான விசாரணையின் போது, சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 போலீசாரை விசாரிப்பது மிக முக்கியமான ஒன்று என்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதிட்டது.

5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க கோருவது ஏன்? என்றும் சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இதையடுத்து சிபிஐ காவலில் செல்வது குறித்து 5 போலீசாரிடமும் நீதிபதி தனித்தனியே கேட்டறிந்தார். 5 போலீசாரும் சிபிஐ காவலில் செல்ல ஒப்புதல் தெரிவித்தனர். அதே சமயம், வழக்கறிஞர்கள் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என 5 போலீசாரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்ற நீதிபதிகள், சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் 5 காவலர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், போலீசாரை எப்படி அழைத்து செல்கிறீர்களோ, அப்படியே மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என சிபிஐக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்

Tags : CBI ,policemen ,Shridhar ,Thisayanvilai , Sathankulam, father, son, murder, case, police investigator, Sridhar, 2 days, CBI, police
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...