தேர்தல் நடத்தும் விதிமுறைகளுக்கான சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும்: ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தேர்தல் நடத்தும் விதிமுறைகளுக்கான சட்ட திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்திய தேர்தல் ஆணைய தலைமை கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்காமல், சட்டத்திற்கு புறம்பாக ‘தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2019’ மற்றும் ‘தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை, 2020’ ஆகியவற்றை மத்திய அரசு  கொண்டுவந்துள்ளது. இந்த சட்ட திருத்தம் அரசியலைமைப்பு சரத்துக்களுக்கு எதிரானது.

இந்த சட்டத்தில் உள்ள திருத்தங்கள் பெரும்பான்மையான வாக்காளர்களை வாக்களிக்காத வாக்காளர்கள் பிரிவின் கீழ் கொண்டு வரும் வகையில் உள்ளது. பிரச்னைகள், கிளர்ச்சிகளை உருவாக்கும் வகையில் எந்த ஆய்வையும் நடத்தாமல் இந்த திருத்தங்களை தேர்தல் ஆணையம் எடுத்திருக்கிறது. இந்த முடிவு சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தும் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தை அழித்துவிடும். வாக்களிக்காத வாக்காளர்கள் முறை என்ற சரத்து போலி வாக்காளர்கள் உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையும். புதிய திருத்தங்கள், மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய சேவையாற்றுபவர்களை வாக்களிக்காத வாக்காளர்கள் என்ற பட்டியலில் வகைப்படுத்துகிறது.

இந்த 2020 சட்ட திருத்தத்தில் மூத்த குடிமக்களுக்கான வயது 80-ல் இருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் தற்போதைய திருத்தத்தின்படி தபால் ஓட்டு போடுவதற்கு தகுதியானவர்கள். இது தேவைப்படும் பிற இயலாமை ஆணைக்கு முற்றிலும் எதிரானது. மேலும் 65 வயது அடைந்தவர்களும் தபால் ஓட்டு போடுவதற்கே முன்னுரிமை தருவார்கள். இந்த புதிய திருத்தம் நிதி சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டவிரோதத்துக்கு வாய்ப்பு அளிப்பதோடு, வாக்குகளை இடையில் புகுந்து மாற்றுவதற்கும், சாதகவாதத்துக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் இருக்கும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றவர்களை போன்று எந்த பாகுபாடும் இல்லாமல் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வந்தனர்.

ஆனால் இந்த புதிய விதி 65 வயதுக்கு மேற்பட்டவர்களை சமுதாயத்தில் இருந்து துண்டிப்பதோடு, தேர்தல்களில் பங்கேற்பதில் இருந்தும் தேர்தல் ஆணையம் விலக்கி வைக்கிறது. 65 வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் என்றால் விதிகளை திருத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. நிரந்தர திருத்தமாக கொண்டுவரப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று தொடர்ந்து இருக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கருதுகிறதா என்று தெரியவில்லை. இருப்பினும் கடந்த 1ம் தேதியிட்ட தேர்தல் ஆணைய கடிதத்தில் இந்த திருத்தங்கள் ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலுக்கு மட்டும்தான் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஜார்க்கண்ட், டெல்லி மாநில மூத்த குடிமக்களுக்காக, இந்த திருத்தத்தை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடம் ஆலோசனை பெறாமல் பெரிய மாநிலமான தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல.

எனவே இந்த முடிவு தன்னிச்சையானது மட்டுமின்றி நியாயமற்றதும் கூட இந்த திருத்தத்தை தொடர விரும்பினால் ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தவேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நிரந்தர விதியாக கொண்டுவரக்கூடாது. ஜார்க்கண்ட், டெல்லி போன்ற சிறிய மாநிலங்கள் தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு சமமானதா?

எனவே தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை, 2019 மற்றும் தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2020 ஆகியவற்றை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் உடன் கூட்டங்களை நடத்தி, சுதந்திரமாக வாக்களிக்கும் சட்டரீதியான உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், குடிமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சிறந்த தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் அரசியலைமைப்பு சரத்துக்களுக்கு எதிரானது.

Related Stories: