காமராஜர் பிறந்த நாளை தமிழகம் மீட்பு நாளாக கொண்டாட வேண்டும்: காங்கிரசாருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: காமராஜர் பிறந்த நாளை தமிழகம் மீட்பு நாளாக கொண்டாட வேண்டும் என்று காங்கிரசாருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாழ்ந்த தமிழகத்தை தலை நிமிரச் செய்ய, இழந்த பெருமைகளை மீட்க, காமராஜரின் பொற்கால ஆட்சி முறையை மீண்டும் அமைத்திடும் வகையில், மக்கள் விரோத ஊழல் சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைத்திட அவரது பிறந்தநாளை தமிழகம் மீட்பு நாளாகவும், உறுதிமொழி ஏற்பு நாளாகவும் கொண்டாட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, ஜுலை 15ம்தேதி காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகள் அவரது படத்தை அலங்கரித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, அவரது படத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் தமிழக காங்கிரஸ் அனுப்பியுள்ள உறுதிமொழியை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: