பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 11 பழைய குற்றவாளிகள் சுற்றிவளைத்து கைது: தனிப்படை போலீசார் அதிரடி

பொன்னேரி:  பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 11 பழைய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் மீஞ்சூர் அருகே சுற்றிவளைத்து கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் காவல் நிலைய எல்லை பகுதியில் திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சென்னை, எண்ணூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, பட்டாளம், புளியந்தோப்பு, பெரம்பூர், வியாசர்பாடி மற்றும் கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பழைய குற்றவாளிகள், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மின்சார வாரியத்துக்கு சொந்தமான குடிநீரேற்று நிலையத்தில் பதுங்கியிருப்பதாக மீஞ்சூர் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்பேரில், போலீசார் நேற்று முன்தினம் குடிநீரேற்று நிலையத்தை சுற்றிவளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த 11 பேரையும் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  சென்னை எண்ணூர், அன்னை சிவகாமி நகரை சேர்ந்த ரஞ்சித் (35). புளியந்தோப்பை சேர்ந்த சுரேஷ் (20). நரேஷ்குமார் (28). ஷேக் மாலிக் (22). சிவா (27). பட்டாளம் பகுதியை சேர்ந்த அஜய் சீனு (23). ஹரிஷ் (20). அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த மாரிமுத்து (22). கொளத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (28). பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஜெய் வினோத் (23). வியாசர்பாடியை சேர்ந்த உதயா (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து  போலீசார்  11 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: