சமூக வலைத்தளங்களில் தொடர் அச்சுறுத்தல் சென்னையில் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சமூக வலைத்தளங்களில் பெரியாருக்கு எதிரான அச்சுறுத்தல் பதிவை தொடர்ந்து சென்னை முழுவதும் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராக சிலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரியார் குறித்தும், அவரது சிலைகள் குறித்து மோதல் ஏற்படும் வகையில் சிலர் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து பெரியார் அமைப்புகள் சார்பில் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து சென்னை சிம்சன் சிக்னல், அண்ணாசாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகள் மற்றும் நகரின் பல இடங்களில் உள்ள பெரியார் சிலைகள் அனைத்துக்கும் நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவு செய்த நபர்கள் குறித்தும் சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: