திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்துள்ள ரூ.50 கோடி பழைய நோட்டுகளை மாற்றித் தரும்படி வேண்டுகோள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ.50 கோடி உள்ளது. இந்நிலையில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேரில் சந்தித்து பேசினார். அப்போது, கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பழைய ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் சுப்பாரெட்டி கூறியதாவது:

கொரோனாவை தடுக்கும் விதமாக கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 12,500 பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தேவஸ்தானத்திற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மூலம் காணிக்கையாக வழங்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் ரூ.50 கோடி உள்ளது. இதை ரிசர்வ் வங்கி மூலம் மாற்றி தர வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.இதனால், தேவஸ்தானத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: