திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா: பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனையில் குவிந்த பொதுமக்கள்

திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக இன்று அதிக அளவில் பொதுமக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருச்சி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜூலை 9-ம் தேதி 93 பேருக்கும், ஜூலை 10-ம் தேதி 109 பேருக்கும், ஜூலை 11-ம் தேதி 128 பேருக்கும், ஜூலை 12-ம் தேதி 103 பேருக்கும், இன்று 92 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1,598 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 879 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 698 பேர் சிகிச்சையில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை காய்ச்சல் பிரிவில் கொரோனா பரிசோதனை செய்ய இன்று பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 800 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா பரிசோதனை செய்வதற்கு வரும் அனைவருமே காய்ச்சல் நோயாளிகள் அல்லர். அறிகுறிகள் இல்லாத நிலையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் வருகின்றனர். இதனிடையே கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை இன்னும் சில நாட்களில் 1,500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: