×

தங்கம் கடத்தல் விவகாரம்: கேரள அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு

திருவனந்தபுரம்: 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டி அவரின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த மாதம் 30ம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்தில் பறிமுதல் செய்தனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராக இருந்தபோது இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் வெளியானதும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பென்னி பெஹனன் கூறுகையில், தங்கக் கடத்தலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றியவர். குற்றம்சாட்டப்பட்டவர்களை மறைக்க முதல்வர் அலுவலகம் முயற்சிக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும், முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் எனவும், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர உள்ளதாக பெஹனன் தெரிவித்துள்ளார்.



Tags : Opposition parties ,government ,Kerala ,Binarayi Vijayan , Gold smuggling, no-confidence motion, Binarayi Vijayan
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு