திருவனந்தபுரம்; பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவையே உலுக்கிய தங்க கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பெங்களூரில் கைது செய்த இருவரையும் கொச்சி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பில்லை என்று உறுதியானதை அடுத்து, அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் என்.ஐ.ஏ. கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்.ஐ.ஏ.) தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
என்.ஐ.ஏ. தாக்கல் செய்த மனுவில், தங்க கடத்தளுக்கு ஏதுவாக ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் போலி முத்திரை மற்றும் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் என்.ஐ.ஏ.தெரிவித்துள்ளது. மேலும், கடத்தப்பட்ட தங்கமானது நகை செய்வதற்காக அல்ல என்றும் பயங்கரவாத நடவடிகைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, குற்றவாளிகள் இதேபோன்று 2019 ஆம் ஆண்டு இரண்டு முறை தங்க கடத்திலில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருமுறை 18 கிலோ, மற்றொரு முறை 9 கிலோ என மொத்தம் 27 கிலோ எடையிலான தங்கம் கடத்தியுள்ளனர் என என்.ஐ.ஏ. தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.