சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 11ம் தேதி சனிக்கிழமை மட்டும் 178 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
நேற்று அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது.
ஊரடங்கு நாளில் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாயும், திருச்சி மண்டலத்தில் 39 கோடி ரூபாயும், சேலம் மண்டலத்தில் 37 கோடி ரூபாயும் விற்பனையாகியுள்ளன. கோவை மண்டலத்தில் 36 கோடி ரூபாயும் சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் 21 கோடி ரூபாய் என மொத்தமாக கடந்த சனிக்கிழமை மட்டும் 178 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 1 வாரத்தை ஒப்பிடுகையில் 9 கோடி ரூபாய் அதிகமாகும்.