கல்வி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூகுளின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தேன்: சுந்தர் பிச்சையுடனான கலந்துரையாடல் குறித்து பிரதமர் மோடி ட்வீட்

புதுடெல்லி: பிரதமர் மோடி, ஆல்ஃபபெட் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையுடன் இன்று காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பில், வேலை சூழலில் கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், மற்றும் தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இன்று காலை, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடனான கலந்துரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள், தகவல் பாதுகாப்பு குறித்தும் விவாதித்தோம். கல்வி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூகுளின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தேன்.

குறிப்பாக இந்தியாவின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்ற தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பொதுமுடக்க காலத்தில் உருவாகி வரும் புதிய பணி கலாச்சாரம் பற்றி நான் பேசினேன். கொரோனா தொற்றுநோயால் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். மேலும், தரவு பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசினோம். டிஜிட்டல் துறைகளில் கூகுளின் பங்கு குறித்து கேட்டறிந்தேன். குறிப்பாக கல்வி, கற்றல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்ற பல துறைகளில் கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என கூறியுள்ளார்.

Related Stories: