சென்னை: ஊரடங்கு காலத்திற்கான மின் கட்டணம் செலுத்தாத தொழில் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதால் தொழில் முனைவோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணத்தை, இதற்கு முந்தைய 2 மாதத்திற்கு செலுத்தப்பட்ட தொகையை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடி கிடந்ததால் எவ்வித வருமானமும் இல்லாத நிலையில், மின் கட்டணத்தை செலுத்த மின் வாரியம் நெருக்கடி கொடுப்பதால் தொழில் முனைவோர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
மேலும், மின் கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பை துண்டிக்க நேரிடும் என்று மின் வாரிய அதிகாரிகள் மிரட்டுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஊரடங்கினால் உற்பத்தி பாதித்துள்ள சூழ் நிலையில், ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் வாடகை போன்ற நிதி நெருக்கடியில் தவிப்பதாக தொழில் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொழில் முனைவோர் கூறியதாவது, 50 லட்சம் பேர் இந்த தொழிலை நம்பி வாழ்கின்றனர். ஊரடங்கால் அவர்கள் அனைவரின் வாழ்வாதாரமானது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் இரண்டுமே வாடகை தரவேண்டிய சூழல் உள்ளது. பெரிய பெரிய நிறுவனங்கள் அனைத்திருக்கும் எங்கள் தொழில் நிறுவனங்கள் மூலம் தான் அனைத்து பாகங்களும் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், தற்போது 2 மாதங்களாக எந்தவித வருமானமும் இல்லாத நிலையில், எவ்வாறு? மின் கட்டணம் செலுத்துவது வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், மின் கட்டணம் செலுத்துவதில் முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும், இல்லையேல் தொழில் நிறுவனங்களை மூடுவதை தவிர வேறு வழிஇல்லை என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.