மும்பை: கொரோனா பாதிப்பில் இருந்து தமது குடும்பத்தினர் மீண்டு வர வாழ்த்தியவர்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் நன்றி தெரிவித்துள்ளார். பாலிவூட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அபிஷேக்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அவர்களது 8 வயது மகள் ஆராத்யாவும் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமது குடும்பத்தினர் நலம்பெற வாழ்த்திய அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவிப்பதாக அமிதாப்பச்சன் ட்விட்டரில் பதிவிட்டிருகிறார். இதனிடையே அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து மீண்டு வர அவர்களது ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். அமிதாப்பச்சனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தமது குடும்பத்தினர் நலம்பெற வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அபிஷேக்பச்சன், அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார். அபிஷேக்பச்சனுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த திரை நட்சத்திரங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.