இறுதி விசாரணை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தலைமை நீதிபதியிடம் வக்கீல்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: வழக்குகளின் இறுதி விசாரணைக்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலையில் இறுதி விசாரணை நடத்துவதற்காக வழக்குகள் பட்டியலிடப்பட்டிருப்பது வக்கீல்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இறுதி விசாரணை முடிவை மறுபரிசீலனை செய்ய  வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வக்கீல்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜூலை 6ம் தேதி முதல் நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான இறுதி விசாரணை நடைபெறும் என்றும் அதற்கான வழக்கு விபரங்கள் பட்டியலிடப்படும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெரும்பாலான வழக்குகளின் ஆவணங்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ள வக்கீல்களின் அறைகளில் உள்ளன. அவற்றை எடுக்க முடியாத நிலை தற்போது உள்ளது. மேலும், இறுதி விசாரணை என்பது மிக விரிவான முறையிலான வாதங்களுடன் விசாரிக்கப்பட வேண்டும். இது வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறுவது வக்கீல்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிடும். வக்கீல்கள் வழக்கு தொடர்ந்தவர்களிடம் வழக்கு தொடர்பான விபரங்களை நேரில் கேட்பதும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் முடியாத ஒன்றாகும்.  

எனவே, வழக்குகளின் இறுதி விசாரணை என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: