கிங்ஸ்வில்லே: அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் முறையாக, போர் விமானத்தை இயக்குவதற்கு கருப்பின பெண் பைலட் தேர்வாகி இருக்கிறார். உலகின் மிகச்சிறந்த விமானப்படையை கொண்டுள்ள அமெரிக்காவில், கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக ரோஸ்மேரி மெரினர் என்ற பெண் பைலட், போர் விமானத்தை இயக்க தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், அமெரிக்காவின் முதல் பெண்போர் விமானி என்ற பெருமையை அவர் பெற்றார். இந்நிலையில், அமெரிக்க கடற்படையில் முதல் முறையாக போர் விமானத்தை இயக்குவதற்கு கருப்பினத்தை சேர்ந்த முதல் பெண் பைலட்டாக, ஜே.ஜி.மெடலின் ஸ்விக்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள பர்கே என்ற இடத்தை சேர்ந்தவர். அமெரிக்க கடற்படை பயிற்சி மையத்தில் 2017ல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், கடற்படை விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். கடற்படை போர் விமானங்களை இயக்குவதற்கான முறையான அனுமதி, இம்மாத இறுதியில் மெடலினுக்கு வழங்கப்பட உள்ளதாக, அமெரிக்க கடற்படை நேற்று வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.