திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் காணொலி காட்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடல்

சென்னை: தி.மு.க இளைஞரணி நிர்வாகம் இதுநாள் வரை மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் அமைப்புகளில் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் இளைஞரணிக்கு ஒன்றிய கிளைகளிலும், பகுதி, நகர, பேரூர் வட்டங்களிலும் புதிதாக அமைப்பை ஏற்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் உள்ள வட்டங்களிலும் இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத் தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சைதை மேற்கு, கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய வட்டங்களின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று சந்தித்து உரையாடினார். அப்போது புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், ‘கழகத்தில் முதன்மையான அணி இளைஞரணிதான்’ என்று கலைஞர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையிலும், அந்தப் பெருமையை தக்கவைக்கும் வகையிலும் நம் பணி இருக்க வேண்டும்’ என்று பேசினார். இந்த சந்திப்பின்போது இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், மாவட்ட அமைப்பாளர் பிரபாகர் ராஜா உள்ளிட்ட பலர் காணொலிக் காட்சியின் வாயிலாக இணைந்தனர்.

Related Stories: