×

கொரோனா பரவல் சூழலில் நெடுஞ்சாலை துறையில் ரூ.12 ஆயிரம் கோடி திட்டங்கள் தேவையா? கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:
ஆதாய நோக்கத்தோடு நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற போர்வையில் சில முடிவுகளை தமிழக அரசு எடுத்திருக்கிறது. ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை விரிவாக்கம், சாலை உறுதிப்படுத்துதல், போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசு தனது இணைய தளத்தில் டெண்டர் வெளியிட்டிருக்கிறது. இதற்கு சூழல் தாக்க மதிப்பு கட்டாயமல்ல என்ற ஓட்டையை பயன்படுத்தி ஐ.ஆர்.சி. வழிகாட்டுதல்களை புறக்கணித்து டெண்டர் விடப்பட்டுள்ளன. சாலைத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்கத்தை கணக்கில் கொள்ளாமல் டெண்டர் விடுவது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ரூ.12 ஆயிரம் கோடி திட்டம் மதிப்பிலான பணிகளுக்கு எப்படி கணக்கிட்டாலும் மிகக் குறைந்தபட்சமாக சல்லிகள் தேவை மட்டும் 59 கோடி கன அடிகள் இருக்கும். அதாவது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அந்த உடைக்கப்பட்ட பாறைகளை பரப்பினால் அதன் உயரம் 54 அடிகளுக்கும் மேலிருக்கும். சுமார் 20 லட்சம் லாரிகள் கொள்ளளவுள்ள இந்த கற்களின் தேவைக்கு எத்தனை மலைகளையும், குன்றுகளையும் பிளக்கப் போகிறார்கள் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். மணலுக்கு ஆறுகளோ இல்லை. எம் சாண்ட் என்ற பெயரில் மீண்டும் மலைகள் நாசம் செய்யப்படப்போகின்றன.

கொரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து நாம் இன்னும் மீண்டிடாத நிலையில் தமிழக அரசின் நிதிநிலைமை கடன்சுமையிலும், பற்றாக்குறையிலும் அதலபாதாள நிலையிலிருக்கும் போது ரூபாய் 12 ஆயிரம் கோடியில் நெடுஞ்சாலைத் திட்டம் தேவையா என்று மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. கொரோனாவை ஒழிக்க நிதி ஒதுக்கீடு என்பது தமிழக அரசின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். மேலும் பொருளாதாரப் பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க நிதி ஒதுக்கப்படவேண்டும். அவற்றுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்காமல் நெடுஞ்சாலைத் திட்டங்களை கோடிக்கணக்கான ரூபாயை விரயம் செய்வதில் தமிழக அரசுக்கு ஏதே உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.  

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் ஆய்வுக்குட்படாமல் நெடுஞ்சாலைத் துறையில் ரூபாய் 12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டங்களை நிறைவேற்றுவது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் தேவையற்ற ஒன்று இந்த டெண்டரை விடுவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் பெறுவதற்கான முயற்சியில் அ.தி.மு.க. அரசு ஈடுபட்டிருக்கிறது என்கிற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. எனவே, இன்றைய சூழலில் ரூபாய் 12 ஆயிரம் கோடி நெடுஞ்சாலைத் துறைக்கான டெண்டரை உடனடியாக ரத்து செய்து அந்த நிதியைக் கொண்டு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்குப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கே..எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona Distribution, Highways Department, Rs 12,000 crore, Devaiah, KS Alagiri, Question
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...