சென்னை: கொரோனா சமூக பரவலாக மாறியதா, பொதுமக்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பதை கண்டறிய பொதுமக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்த ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. இதன்படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்த ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணமாலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் சென்னையில் உள்ள காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை நடத்தவுள்ளன. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிவது மூலம் சமூகத்தில் கொரோனா எந்த அளவுக்கு பரவி உள்ளது என்பதை கண்டறிய முடியும். இவர்களிடம் இருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் எலிசா பரிசோதனை முறையில் சோதனை செய்யப்பட்டு ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்படும். நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிய முடியும்.