கொரோனா பரவலை தடுக்கும் வகையில் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிய ஆய்வு: விரைவில் சென்னையில் தொடக்கம்

சென்னை: கொரோனா சமூக பரவலாக மாறியதா, பொதுமக்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பதை கண்டறிய பொதுமக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்த ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. இதன்படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்த  ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணமாலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் சென்னையில் உள்ள காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை நடத்தவுள்ளன.  இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிவது மூலம் சமூகத்தில் கொரோனா எந்த அளவுக்கு பரவி உள்ளது என்பதை கண்டறிய முடியும். இவர்களிடம் இருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் எலிசா பரிசோதனை முறையில் சோதனை செய்யப்பட்டு ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்படும். நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிய முடியும்.

இச்சோதனை நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ளவர்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், காவல் துறையினர், ஊடக துறையினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள், உள்ளாட்சி துறை ஊழியர்கள், பொது போக்குவரத்து ஊழியர்கள், வங்கி, அஞ்சல் சேவை ஊழியர்கள், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள், விமான துறை ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது. இதனை தவிர்த்து பொது மக்களிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். சென்னையில் இந்த ஆய்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் பாதித்த இடங்கள் உள்ளிட்ட ஆய்வு நடத்துவதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டது. விரைவில் இந்த ஆய்வு தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: