ஒற்றுமையுடன் போராடுவதால் கட்டுக்குள் உள்ளது கொரோனா...! நிச்சயம் வெல்வோம்; உள்துறை அமைச்சர் அமித்ஷா

புதுடில்லி: கொரோனாவுக்கு எதிரான போரட்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் போராடுவதால் தொற்று கட்டுக்குள் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து ஊடரங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் 5-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்தபோது, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,20,916-லிருந்து 8,49,553-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,123-லிருந்து 22,674-ஆக உயர்ந்துள்ளது. புதுடில்லியில் மத்திய ஆயுத போலீஸ் படை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமித்ஷா பேசியதாவது: கொரோனா வைரசுக்கு பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா உறுதியுடன் போராடும். நாடு கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வருவதை உலகமே உற்று கவனித்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக கூட்டாச்சி அமைப்பை கொண்ட இந்தியாவில் கொரோனா எவ்வாறு கட்டுப்படுத்தப்படும் என சந்தேகம் எழுந்துள்ளது. 130 கோடி மக்கள் மற்றும் அனைத்து மாநிலங்கள் ஒற்றுமையாக நின்றனர். கொரோனா நோயை எதிர்த்து போராட நாட்டில் அனைவரும் கைகோர்த்துள்ளனர். தொற்றை எதிர்த்து போராடி வெல்லும் திறன் நம்மிடம் உள்ளது. கொரோனா தொற்று ஒழிப்பில் சிஇஏபிஎப் பணியாளர்கள் 31 பேர் பலியாகி உள்ளனர் . அவர்களின் தியாகங்கள் வீணடிக்கப்படவில்லை என அமைச்சர் அமித்ஷா கூறினார்.

Related Stories: