கல்லூரி தேர்வுகள் தேவையில்லை...! இந்த சமயத்தில் தேர்வு நடத்துவது இயலாத காரியம்; மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று விடுத்துள்ள வீடியோ பதிவில், கடைகளுக்குச் சென்று தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் பொருட்கள் வாங்குவதாலும், திருமண நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் அதிக கூட்டத்தைக் கூட்டி முகக்கவசம் அணியாமல் பங்கேற்பதாலும் கொரோனா தொற்று பரவி வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவும் நேரத்தில் வீட்டிலேயே திருமணத்தை வைத்துக்கொள்ள வேண்டும். கோவிலில் வைக்க வேண்டும் என்றால் மிகக் குறைந்த அளவில் உறவினர்களை அழைத்து திருமணத்தை நடத்த வேண்டும். அதிகப்படியானோரை அழைத்து திருமணம் செய்வதால் திருமணத்துக்கு வருவோருக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்க வேண்டும். உயிரிழப்பை தவிர்ப்பது மக்கள் கையில்தான் உள்ளது என்றார். கொரோனாவால் நாராளுமன்றத்தில் கூட நிலைக்குழு நடத்தப்படவில்லை. அவையும் கூட்டப்படவில்லை.  இச்சூழ்நிலையில் சட்டப்பேரவை நடத்துவது என்பது அலுவல் குழு செய்யும் முடிவைப் பொருத்துத்தான் இருக்கிறது என கூறியுள்ள முதல்வர், மத்திய அரசில் கட்டுப்பாட்டில் உள்ள யுசிஜி கல்லூரிகளில் இறுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த சமயத்தில் தேர்வு நடத்துவது இயலாத காரியம் என்று குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க முடியாது. கொரோனா தொற்று எப்படிப் பரவும் என்று யாராலும் சொல்ல முடியாது. தேர்வு நடத்தும்போது எந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் கூட வகுக்கப்படவில்லை.

இதற்கிடையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்குத் தேர்வை அறிவித்துள்ளனர். இது சம்மந்தமாக மாணவர்கள் என்னைச் சந்தித்து தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசானது இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது, அதற்கான சூழ்நிலையை உருவாக்குவது சிரமமான காரியம். சென்னையிலும், புதுச்சேரியிலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் கடந்தகால செமஸ்டர்களில் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்குக்  கடிதம் எழுதியிருக்கிறேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

Related Stories: