கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் நாளை முதல் ஜூலை 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால், மருந்தகம், மருத்துவமனை தவிர அனைத்து கடைகளையும் மூட நகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தேனி, வேலூர், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவிவந்த கொரோனா வைரஸை தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை மூலம் கையாண்டு சென்னையை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஆயிரத்து 200க்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் நேற்று சென்னையில் மட்டும் தொற்று கண்டறியப்பட்டது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான முன்னெடுப்புகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். நேற்றுவரை மாவட்டத்தில் 1,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் விருத்தாச்சலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தான் கொரோனா பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக விருத்தாச்சலம் நகராட்சி அறிவித்துள்ளது. இதில் பால், மருந்து கடைகள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட வேண்டும் எனவும் விருத்தாச்சலம் நகராட்சி உத்தரவிட்டுள்ளது.