சாத்தான் குளம்: சாத்தான் குளம் இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தன் குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 2 வது நாளாக இன்றும் திருநெல்வேலி அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து, புறப்பட்டு சாத்தான் குளம் விரைந்துள்ளனர். நேற்று சுமார் 7 மணி நேரம் சாத்தான் குளத்தில், இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் வீடுகளிலும் மற்றும் உறவினர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இதனைத்தொடர்ந்து சாத்தான் குளம் அரசு மருத்துவமனையிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று 2வது நாளாக 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் சாத்தான் குளத்தில் சம்பவம் நடந்த காவல் நிலையம் மற்றும் பென்னிக்ஸ் நடத்தி வந்த செல்போன் கடை ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை சுமார் 10 மணி முதலே சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் அடங்கிய சிபிஐ குழுவினர் நேற்றும் அதற்கு முன்தினமும் பெறப்பட்ட சிபிசிஐடி ஆவணங்கள் அனைத்தையும் மற்றும் அவர்கள் கொடுத்த சில தடையங்கள் முழுவதும் ஆராய்ந்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை முடிவில் ஏற்கனவே கடந்த 7-ம் தேதி தங்களது முதல் பதிவரிக்கையை பதிவு செய்த சிபிஐயினர் அதனை மாற்றி மேலும் சில குற்றவாளிகளின் பெயருடன் இன்று புதிய தகவலறிக்கையை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகள்தான் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை திருநெல்வேலி விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் களவிசாரணை மேற்கொள்வதற்காக சாத்தான் குளம் விரைந்துள்ளனர்.