திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அடைக்கப்பட்டிருந்த திருப்பதி கோவில் மீண்டும் திறக்கப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்தது. திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் தற்போது மேலும் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் விதமாக கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் ஜூன் 8-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு ஊரடங்கு தளர்வு வழங்கி கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 11ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டது.
மேலும், திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பக்தர்கள் என தொடங்கி தற்போது 12500 பக்தர்கள் வரை தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினந்தோறும் 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திரப்பிரதேசத்தில் தற்போது வரை கொரோனாவால் 27,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 309 பேர் உயிரிழந்த நிலையில், 14,393 பேர் குணமடைந்துள்ளனர்.