சென்னை: ஆவடி மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் பாதிப்பானது உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது சென்னையை போலவே தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது காணமுடிகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 333 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் பணிகளில் மாநகராட்சி ஆய்வாளர்களே அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆவடி மாநகராட்சியில் கடந்த 3 மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆவடி மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குரோம்பேட்டையை சேர்ந்த இவர், 4 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் 3 நாட்களுக்கு மாநகராட்சி அலுவலகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.