உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை; கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு..!!!

சென்னை: கொரோனா நோய் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டடுள்ளார். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தலைமையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவதற்கு தேவையான மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லாத இன்றைய சூழலில் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு குறைவான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள் கோவிட் பராமரிப்பு மையங்களிலும், மிதமான அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகள் கோவிட் நல மையங்களிலும், தீவிர தொற்று அறிகுறிகளுடன்  உள்ள நபர்கள் கோவிட் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அவர்களின் இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறையும் பொழுது மூச்சுத் திணறல்  ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு நோயாளிகளின் இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட finger pulse oximeter என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை வெகு எளிதாக அளவிட ஏதுவாக இக்கருவியை அதிகளவில்  பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43,000 inger pulse oximeter கருவிகளை கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டு, இதுவரை 23,000 கருவிகள்  தருவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கருவிகள் ஓரிரு நாட்களில் பெறப்படும்.

 தேவையின் அடிப்படையில் இக்கருவிகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்.

இக்கருவி, அறிகுறிகள் இல்லாமல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்கவும், காய்ச்சல் சிகிச்சை  மையங்கள், கோவிட் பராமரிப்பு மையங்கள், கோவிட் நல மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்கவும் அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு  வரப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் பணிகள் கொரோனா தொற்று மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் குறைக்க உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: