கல்யாண மண்டபங்களில் ஆகஸ்ட் 1 முதல் திருமணம் நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும்: கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்

கூடுவாஞ்சேரி: தமிழகம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் திருமணம் நடக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து கல்யாண மண்டப மாநில உரிமையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள என்பிஆர் திருமண மண்டபத்தில் நடந்தது.  மாநில சங்க தலைவர் ஜான் அமல்ராஜ் தலைமை  தாங்கினார்.  மாநில செயலாளர் வாசுதேவராவ், கௌரவ தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக மாநில பொருளாளர் என்பிஆர் மனோகர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் கலந்துகொண்டு அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்க துவக்க விழாவை குத்துவிளக்கு ஏற்றி  கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில், ஆயிரம் பேர் உட்கார கூடிய வசதிகொண்ட திருமண மண்டபங்களில் 500 பேர் வருவதற்கு அனுமதி வழங்க வேண்டும். அல்லது திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் பேர் பங்குபெற அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பித்த நாளிலிருந்து ஓராண்டுக்கு திருமண மண்டபங்களின் சொத்து வரி உள்ளிட்ட பல விதமான வரிகளை ரத்து செய்ய வேண்டும்.  மண்டப உரிமையாளர்கள் ஏற்கனவே வாங்கியிருந்த கடன் உதவிகளை ஓராண்டுக்கு பிறகு வட்டியில்லாமல் வசூலிக்கவும் அரசு வழிவகை செய்யவேண்டும். மேலும் திருமண மண்டபங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் திருமணம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: