நீதிமன்ற உத்தரவின்பேரில் புலம்பெயரும் தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் ரேஷன்பொருள்: அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆலங்குடியில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:  கொரோனா ஊரடங்கு காலத்தில் பிற பணிகளும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இதேபோன்று கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கால்நடை துறையில் விவசாயிகள் பயனடையும் வகையில் சேலம் தலைவாசலில் முதல்வர் பழனிசாமி மூலம் துவங்கப்பட்ட ஆராய்ச்சி மையம் தெற்காசியாவிலேயே மிகப்பெரியது.  இதன்மூலம் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் எங்கிருந்தாலும் அடையாளம் காணப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்திற்கு தேவையான உரங்களை ஆன்லைன் மூலம் பெறுவது காலத்தின் கட்டாயம். விவசாயிகளுக்கு பிரச்னைகள் இருப்பின் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழர்களை அழைத்து வர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

Related Stories: